Thursday, January 15, 2026

 

15.1.2026

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு - ஒரு சிந்தனை!

(எழுத்து: முனைவர் ச மீனாட்சி,  தலைவர், சிங்கப்பூர் சைவ சித்தாந்த சங்கம்)

தை முதல் நாள். தமிழர்களின் புத்தாண்டு! இது உழவர்களுக்குரிய பொங்கல் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது . எனினும், சித்திரை மாதம் முதல் நாளையே இக்காலத் தமிழர் பலர் தமிழ்ப் புத்தாண்டாகக் கருதுகிறார்கள். சித்திரைப் புத்தாண்டு, இந்துப் புராண அடிப்படையில் 60 ஆண்டு கால சுழற்சி வருடங்களாக வரும். அது பல்லவர் காலத்தில் அறிமுகமானதாக அறியப்படுகிறது.சுழற்சியாக வருவதால், இது காலக் கணக்கைச் சரியாகத் தர இயலாது. மாறாக, தமிழ்ப் புத்தாண்டு என்பது தொடராக வருகிறது. ஆங்கிலப் புத்தாண்டு (Gregorian calendar) அவர்களின் கலாசாரத்தில் முக்கியமானவராக விளங்கும் ஜீசஸ் என்பவரின்  வாழ்வுக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பது போல் தமிழ்ப் புத்தாண்டு, தமிழ் மாமுனிவர் திருவள்ளுவரின் வாழ்வுக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.

 

ஓர் ஆண்டு முடிந்து மறு ஆண்டு தொடங்கும்போது வீட்டிலுள்ள தேவையற்ற பொருட்களைக் கழித்துக்கட்டி, வீட்டைப் புதுப்பிக்கும்  வழக்கம் பொதுவாக ஆசியப் பண்பாடுகள் பலவற்றிலும் காணப்படுவதுதான், சீனப் பண்பாடு உட்பட.  அவ்வாறே, பொங்கல் தினம், தமிழர்களின் புத்தாண்டாகப் பல்லாண்டு காலம் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது.தமிழ் கிராமங்கள் பலவற்றில் புத்தாண்டை முன்னிட்டு வீட்டைச் சுத்தப்படுத்தி வெள்ளையடித்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, அறுவடை செய்யப்பட்ட நெல்லிலிருந்து பெறப்பட்ட புது அரிசியில் பொங்கல் வைப்பது வழக்கம். தை முதல் நாளில் புத்தாண்டு தொடங்குவதால் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்வழக்கும் வந்தது.

 

தை மாதத் தொடக்கத்தைத் தமிழர்கள் ஏன் ஆண்டின் தொடக்கமாகக் கொண்டனர் என்பதற்கு ஓர் அறிவியல் காரணமும் உள்ளது. தமிழர்கள் சூரியனைக் காலக்கணக்கிற்கான ஒரு வழிகாட்டியாகக் கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பொங்கலன்றுதான் சூரியனின் வடபுலப் பெயர்ச்சி நிகழ்கிறது. தென்புலச் சுழற்சியிலிருந்து வடபுலச் சுழற்சிக்கு சூரியன் மாறும் நாளே ஓர் ஆண்டுக் கணக்கின் தொடக்க நாளாகக் கொள்வதற்கு ஏற்ற நாள் என்று நம் முன்னோர் கணக்கிட்டனர். அதனாலேயே பொங்கல் திருநாளைப் புத்தாண்டாக நம் முன்னோர் கொண்டாடி வந்திருக்கிறார்கள். இவ்வாறு பலவகையில் சிறந்து விளங்கும் தை மாதத்தின் முதல் நாள் தமிழரின் வாழ்வில் அதிகாரபூர்வமாகப் புத்தாண்டாக அறிவிக்கப்படாமலேயே கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. காலத்துக்கேற்ப, ஆண்டுக் கணக்கு தேவை என்ற சிந்தனை எழுந்தபோது தமிழறிஞர்கள் பலர் கூடி, திருவள்ளுவர் காலத்தை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுக்கணக்கை அறிமுகப்படுத்தினர்.

 

ஆங்கிலக் கணக்கின் 2026-ஆம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு 2057 தொடங்குகிறது.  திருவள்ளுவர் ஆண்டின் முதல் மாதம் தை மாதம். தமிழ்ப் பேரறிஞர் மு வரதராசனார் இவ்வாறு கூறுகிறார்: முற்காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாள்தான் வருடப் பிறப்பாகத் தமிழ் நாட்டில் வழங்கி வந்திருக்கிறது. அந்த நாள்முதல் எல்லாருடைய வாழ்வும் பல வகையிலும் புது வாழ்வாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல பழக்கங்களை ஏற்படுத்தினார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுத்தினார்கள். வீட்டுக்கு வெள்ளையடித்து அழகுபடுத்தினார்கள். போக வேண்டிய பொருட்களை எல்லாம் போகிப் பண்டிகையாப் போக்கிவிட்டு புதிய நாளில் பொங்கலோ பொங்கல் என்று புதுப் பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தார்கள். வருடப் பிறப்பாகப் பொங்கலை நாம் னைவரும் கொண்டாட வேண்டும்.இது தமிழறிஞர் டாக்டர் மு.வ. வின் கருத்தாகும்.

 

விருது பெற்ற பழம்பெரும் எழுத்தாளர் அகிலன், தமது 'மிராசுதார் மகள்' என்ற கதையில் "தை மாதப் பிறப்புக்கு முதல்நாள் காலைப்பொழுது" என்று ஒரு கதையைத் தொடங்கியுள்ளார். அதில் அவர் " போகிப் பண்டிகை. மறுநாள் பொழுது விடிந்தால் புத்தாண்டு. புதுப் பொங்கல்" என்று எழுதியிருக்கிறார். தமிழர்களின் புத்தாண்டாம் பொங்கல் நாளைச் சிறப்பாகக் கொண்டாடுவோம்.

 

குறிப்பு:

தைப் புத்தாண்டு கொண்டாடினால் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட முடியாதா என்று சிலர் கேட்கின்றனர். தமிழர்களின் பண்பாடு வேற்றுமையில் ஒற்றுமை கொண்டது.  ஆகவே பலவிதப் புத்தாண்டைக் கொண்டாடலாம். அது அவரவர் விருப்பம்.

மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்ற தெய்வங்கள் காக்கும் நால்வகை நிலம் தமிழகத்தில் இருந்தாலும் ஒரே மொழி பேசப்பட்டது என்று தொல்காப்பியம் விவரிக்கிறது. தாம் வாழும் நிலத்துக்கேற்ற வெவ்வேறு தெய்வங்களைத் தமிழர்கள் வணங்கிவந்தபோதும் அனைத்து தெய்வங்களையும் செயற்படுத்தி அருளும் ஒரே கடவுளாகச் சிவனைப் போற்றி வந்தனர் என்று சங்க இலக்கியங்கள் விளக்குகின்றன. ஒரு மரத்தின் பல கிளைகளாகப் பரந்து விரிந்து வளர்ந்து, மாறியும் வந்துள்ளது தமிழ்ப் பண்பாடு. வளரும்போது பல மாற்றங்களும் தோற்றங்கள் கண்டு வந்துள்ளது.

 

புத்தாண்டு என்பதும் அவ்வாறே! உழவுத் தொழிலுக்கு முக்கியத்துவம் தந்தவர்கள், அறுவடைத் திருநாளை ஆண்டின் முதல் நாளாகக் கருதினர். காலவோட்டத்தில், சூரியன் மேஷ ராசியில் புகும் நாளான சித்திரை முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டனர் தமிழ் மக்கள் பலர். ஆவணி மாதத்தில் புத்தாண்டு கொண்டாடிய வழக்கமும் அக்காலத் தமிழரைடையே, குறிப்பாக சேர நாட்டுத் தமிழரிடையே இருந்ததாகவும் தெரிகிறது. .

எது எவ்வாறாயினும், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் என்று உணர்த்திய திருவள்ளுவர் பெயரில் அறிவிக்கப்பட்ட புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று ஏற்பது மிகப்பொருத்தமாகும். ஏனெனில், இதுவே காலக் கணக்கும் திருவள்ளுவரின் பெயரும் கொண்டுள்ளது. அனைவருக்கும் இப்புதிய ஆண்டு இனிமையாக அமைய இறைவன் அருள்வானாக. ஓம் நம சிவாய.!

 

Saturday, October 28, 2023

சிவனடி பற்றித் திருவள்ளுவர் கூற்று


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 

நிலமிசை நீடுவாழ்வார் (அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:3)

இந்தக் குறளுக்குரிய சரியான விளக்கம் வருமாறு: 

மலர்மிசை - இதயக் கமலம் எனப்படும் மலர் போன்ற மனத்தின் மீது, அதாவது அடியார்களின் உள்ளத்தில்

ஏகினான் - ஏகியவன் / வீற்றிருப்பவன்/ பரவியிருப்பவன்

மாணடி  - மாண்புமிகு அடிகள், சிவபெருமானின் சிறப்புமிகு பாத கமலம்

சேர்ந்தார் - சேர்ந்தவர்கள்

நிலமிசை  -  விண்ணுலகத்தில் 

நீடுவாழ்வார் - நிரந்தரமாக வாழ்வர்.

ஆகவே குறளின் பொருள்: 

சிவபெருமானின் திருவடிகளில் சேர்பவர்கள் நிரந்தரமாக சொர்க்க வாழ்வை அனுபவிப்பர். மறுபிறவி எடுத்து அவதிப்படமாட்டார்கள்.

அந்த நிலையை அடைய நாம் என்ன செய்ய வேண்டும்? 

இந்தஉலகத்தில் வாழும் காலத்திலேயே சிவபெருமானைச் சிந்திக்கவேண்டும். நம் மனத்துக்குள் வேறு சிந்தனைகள் புகுவதைத் தவிர்த்து சிவ சிந்தனையை நிலைநாட்ட வேண்டும். அதற்கு உதவும் திருமுறைகளைப் பாடவேண்டும். 

சிவாய நம. !


 27.10.23 அன்று சிவத்தமிழ்ச் செல்வர் ஆறு நாகப்பன் அவர்கள் நடத்திய திருக்குறள் வகுப்பில் தெளிவுபடுத்தப்பட்ட முக்கியமான உண்மைகள்:

1) ஏகினான் என்ற சொல்லை நடந்தான் என்ற பொருளில் சமணர்கள் பயன்படுத்துகின்றனர். ஏனெனில், அவர்களது ஆதி குருவாகிய அருகர் மலர் மீது நடந்தார் என்று கருதுவதால் அப்படிச் சொல்கின்றனர். ஆனால், நீடு வாழும் குறிப்பு அவர்களின் சமயத்தில் கிடையாது. ஆன்மாக்கள் சிவனடியில் சேர்ந்து நிரந்தரமாக வாழும் கருத்து சைவ சமயத்தில் மட்டுமே உள்ளது. 

2) அன்பர் உள்ளத்தில் இறைவன் வீற்றிருப்பான் என்பது சைவத் திருமுறைகள் அனைத்தும் வலியுறுத்தும் கருத்து. அதுவே இங்கும் பொருத்தம்.  'சிந்தையால் மகிழ்ந்தேத்த வல்லார்' இறைவன் அருள் பெறுவார் என்பது திருமுறை. மனம்தான் இங்கு முக்கியம். மனத்தில் இறைவனை நிறுத்துபவர் 'விண்புனை மேலுலகம் விருப்பெய்துவர் வீடெளிதே' என்பதும் ஞானசம்பந்தர் வாக்குதான்.  

3) மலர் என்றதும் உடனே அருகர் என்று சொல்வது பெரும் பிழை. ஏனெனில் அருகர் மட்டுமின்றி புத்தர் உட்பட்ட இந்தியப் பெருமக்கள் பலரும் தாமரை மீது அமர்ந்திருப்பதும், மலர் தூவி வாழ்த்தப்படுவதும் பொதுவாக இருப்பதால், இது ஒருவருக்கு மட்டும் உரித்தான செயல் இல்லை. தவிர, அருகரும் புத்தரும் மனிதர்கள், உயர் ஆன்மாக்களே தவிர கடவுள் இல்லை. இவ்விரு மதங்களிலும் இறைவன் திருவடியில் ஆன்மாக்கள் சேர்வது பற்றிய சிந்தனையும் இல்லை. 

4) நாத்திகவாதிகள் திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரத்தைக் கீழறுக்க முயன்று, தவறான கருத்துகளைப் புகுத்தினர். ஆனால், அவை பிழையென்று மக்களால் எளிதாக உணர முடியும். ஏனெனில் வேறு பல குறட்பாக்களில் சைவ சமயக் கோட்பாடுகளும் ஆன்மீக விளக்கங்களும் காணப்படுகின்றன.  

சிவ சிவ! 

இந்தக் குறள் குறித்த வெவ்வேறு உரையாசிரியர்கள் தரும் விளக்கங்கள் காண:http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0003.aspx

Wednesday, September 06, 2023

குல தெய்வமும் பரம்பரையும்

 அண்மையில் Quora  தளத்தில் பின்வரும் உரையாடலைப் படித்தேன். 


குல தெய்வம் கண்டுபிடிப்பது ஒரு பெரிய வேலையே இல்லை பவித்ரா அவர்களே.

உங்கள் கணவரின் சொந்த ஊரில் உங்கள் சமூகத்திற்கு சொந்தமான ஏதாவது கோவில் இருந்தால் பெரும்பாலும் அதே கோவிலாக தான் இருக்கும் இல்லை என்றால் அங்கே இருக்கும் பூசாரியை கேட்டால் சொல்லிவிடுவார்.

அப்படி தெரியவில்லை என்றால் இருக்கவே இருக்கிறார் திருச்செந்தூர் முருகன்.

இந்து மதத்தில் ஈடுபாடு காட்டுபவர் குல தெய்வ வழிபாட்டை ஒப்புக்கொள்வாரா என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.


********************************************************************************************************

அவருடைய பங்காளிகள் அல்லது அவர்களின் வாரிசுகள் யாராவது,அவருடைய சொந்த ஊரில் இருப்பார்கள்!அவர்களிடம் விசாரித்தால்,அவர்கள் வணங்கும் குலதெய்வத்தின் பெயரை அறிந்து கொள்ளலாம்!பங்காளிகளின் குலதெய்வம்தான் இவருக்கும் குலதெய்வம்!

இம்முறையிலும் அடையாளம் காண முடியாவிடில், 'எனது முன்னோர் வணங்கிய குலதெய்வத்தை நான் வணங்குகிறேன்' என்று கூறி,மானசீகமாக நினைத்து வணங்கினால் போதுமானது!

குலதெய்வ வழிபாடு நன்மக்கட்பேறை உறுதிப்படுத்தும்!ஆண் வாரிசுகள் அதிகம் உண்டாவார்கள்!மாதம் ஒருமுறையாவது,குலதெய்வத்தை மனதார நினைத்து வணங்குவது அபரிமிதமான பலன்களை அள்ளித் தரும்!

தங்களின் கணவருக்கு எமது வாழ்த்துக்கள்!


********************************************************************************************************


மேற்காணப்படும் அந்த இரு பதிவுகள், தமிழர்களின் குலதெய்வம் குறித்த நம்பிக்கையைப் புலப்படுத்துகின்றன.

ஒருவரின் குலதெய்வம் அவரது பரம்பரையின் அடையாளமாகும். குலத்துக்கு உரிய தெய்வம் எனப் பொருள்பட்டாலும் உண்மையில் அது குடும்பத்துக்கு உரிய தெய்வமாகும்.

ஆண் பிள்ளைகளுக்கு ஒரே குலதெய்வம். பெண்பிள்ளைகள் திருமணத்துக்குப் பின் கணவரின் குலதெய்வத்தைக் கும்பிடுவர்.

ஒரு குலத்தின் தெய்வம், யார் யார் தன் பரம்பரையில் பிறக்கவேண்டும் என்பதைத் தீர்மானித்து ஆசி வழங்கி அந்தந்த ஆன்மாவைத் தன் பரம்பரையில் பிறக்க வைத்து அருளும் என்பதே அடிப்படை நம்பிக்கை. 

இஷ்ட தெய்வத்தையும் பரம்பொருளான சிவபெருமானையும் வணங்கி வந்த தமிழர்கள், கூடவே குலதெய்வத்தையும் போற்றி வந்தனர் என்பதே வரலாறு.

வெளிநாடு வாழ் தமிழர்கள் பலர், ஆண்டுதோறும் தவறாமல் ஊருக்குச் சென்று தங்கள் குலதெய்வத்தை வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 



இது தொடர்பான என் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

 நான் சிங்கப்பூரில் பிறந்ததாலும், அந்தக் காலத்தில் (1960s,70s) வெளிநாட்டுப் பயணம் அடிக்கடி செல்ல வசதி இல்லாததாலும், குலதெய்வக் கோவிலுக்குச் செல்ல இயலவில்லை. உள்நாட்டுக் கோவிலுக்கு, குறிப்பாக நான் வசித்த தஞ்சோங் பகார் வட்டாரத்துக்கு அருகிலுள்ள மாரியம்மன் கோவில், தண்டாயுதபாணி ஆலயம்,  முதலிய கோவில்களுக்குதான் அடிக்கடி செல்வதுண்டு.  சிவபெருமான் அருளால் 40 வயதுக்குப் பிறகு, அடிக்கடி தமிழ்நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு அமைந்தது. அவ்வாறு ஒருமுறை நானும் என் தாயாரும் இந்தியாவுக்குச் சென்றோம். அங்குக் கிராமத்தில் குறி சொல்பவர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் என்னிடம் குலதெய்வ வழிபாடு இதுவரை செய்யாவிட்டாலும் இனிமேலாவது செய்யுங்கள் என்றார்.

உடனே, அருகில் அமர்ந்திருந்த என் தாயாரிடம் சொன்னேன், "நாளையே நாம் சோழப்பிராட்டி அம்மன் கோவிலுக்குச் செல்வோம். அல்லது நெய்வாசல் கருப்பர் கோவிலுக்குச் செல்வோம்" என்று. அதைக் கேட்டதும் குறிகாரர் குறுக்கிட்டார்.

"அம்மா, உங்கள் தாய் தந்தையரின் குலதெய்வம் இப்போது உங்களுக்குப் பொறுப்பேற்காது. நீங்கள் உங்கள் புகுந்த வீட்டுக் குலதெய்வத்தையே வணங்கவேண்டும்" என்றார்.

அது எந்த தெய்வம் என்று கேட்டபோது, "அவர் ஓர் ஐயனார். அங்கு ஒரு நாச்சியாரும் உண்டு. அவர்களின் கோவில் இங்கு இல்லை. தூரத்தில் பட்டுக்கோட்டைப் பக்கம் உள்ளது." என்றார். 


உடனே என் கணவரைத் தொலைபேசியில் அழைத்தேன். குலதெய்வம் யாரெனக் கேட்டேன். அவருக்கும் தெரியவில்லை. ஆனால் சிங்கப்பூரில்  உறவினர் பலர் இருப்பதால் அவர்களிடம் கேட்க முனைந்தார்.  காலஞ்சென்ற என் மாமனாரின் உறவினர்கள் சிலரைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் விசாரித்த பின்னர், அவர்களில் ஒருவர் கொடுத்த விவரத்தை வைத்து,  வாட்டாக்குடி வீரனாரையும் நாச்சியாரையும் கண்டறிந்து அங்குள்ள எங்கள் குடும்பக் கோவிலுக்குச் சென்று சேர்ந்து, பங்காளிகள், குடும்பத்தார் முதலியோரை அறிமுகப்படுத்திக் கொண்டு, மனமகிழ்வெய்தினோம். 


தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் கோவில் கொண்டிருக்கும் குலதெய்வம், சிங்கப்பூரில் பிறந்த என்னை அங்கு வரவழைத்த விதம் என்னால் மறக்க முடியாதது. பட்டுக்கோட்டைப் பக்கம் உள்ளதுதான் என் குலதெய்வம் என எங்களில் யாருக்குமே தெரியாத நிலையில் காரைக்குடிப் பக்கம் இருந்த அந்தக் குறிகாரருக்கு மட்டும் எப்படித் தெரிந்தது என்று நான் எப்போதும் வியந்து போவேன். குறி சொல்பவர்களுக்கு அந்தத் தகவலைச் சொல்வது யார்? அது அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஆச்சரியமாகத் தோன்றுகிறது.   அந்த தெய்வமே வந்து குறி சொல்பவரிடம்  அறிவித்தது என்பதில் எனக்கு ஐயமில்லை. எல்லாம் அவன் செயல். 


மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்.

ஓம் நம சிவாய! 


********************************************************************************************************

Saturday, August 12, 2023

ஆண் பெண் சமத்துவம் - நம் அடிப்படை சமயக் கொள்கை

 நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்!


அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் சில வரிகள்:

"பாதி மதிநதி போதுமணிசடை

     நாத ரருளிய  குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய  மணவாளா"

முதல் இரு வரி,  பிறை சூடிய சிவபெருமான் நமக்கு அருளிய குமரேசன்  என முருகப் பெருமானைக் குறிப்பிடுகிறது.

திருமால், முருகன், அம்மன், என ஆயிரம் தெய்வங்கள் மக்களுக்கு அருளுகின்றன.  அனைத்து தெய்வங்களுக்கும் ஆணையிடும் பெருங்கடவுள்  சிவனின் அருளால்தான் நமக்கு முருகப்பெருமானின் தரிசனமும் வழிகாட்டலும் நேரடி அருளும் கிடைக்கிறது.

முருகனை வேண்டினால் கேட்டது கிடைக்கும் என்பது பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அனுபவம் ஆகும். வேண்டியது நிறைவேறிய மகிழ்ச்சியினால், மக்கள் காவடி சுமந்தும் பால்குடம் தூக்கியும் முருகனுக்கு நன்றி கூறும் அழகிய நிகழ்வு தைப்பூச நன்னாளில் நிகழ்கிறது.

மதி நதி போதும் அணி சடை என்ற வரியில், சிவபெருமான் தன் தலையில் கங்கையைச் சூடிய தன்மை கூறப்படுகிறது. அர்த்த நாரீஸ்வரரான சிவன், ஆணும் பெண்ணுமாக சமபாகத்தில் தோற்றமளித்து, உலகில் ஆன்மாக்கள் ஆணும் பெண்ணுமாகப் பிறவி கொள்ளும்போது சமமாகத் தம் அருளைப் பெறுவதை உணர்த்தினார். ஆண், பெண் இருபாலரும் சமமான தெய்வத்தன்மை கொண்டிருப்பதைக் கூறும் உயர்ந்த சமயம் இந்து சமயம்! 


பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய  மணவாளா...

இந்த வரியின் பொருள்: சர்க்கரைப் பாகும், கனிகளும் போன்ற

இனிய மொழியை உடைய மாதரசி குறமகளாகிய வள்ளியின்

பாதத்தைப் பிடித்துவிடும் மணவாளனே.

முருகப் பெருமான் தன் மனதுக்கினிய மனைவியின் பாதங்களைப் பிடித்துவிடுவதாக அருணகிரி நாதர் கற்பனையில் காட்சி அமைத்து இப்பாடலைப் பாடியுள்ளார். 
பெண்களை அடிமையாக எண்ணி, அவர்களை மதிக்காமல் நடக்கும் ஆண்கள் இதனைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
பெரும் சக்தி கொண்ட தெய்வமான முருகன், பெண்ணுக்கு சேவகம் செய்வதாக எண்ண இடம் தருவது தமிழ்ச் சமயம்.

ஆகவே, தமிழ்ப் பண்பாடு, ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாதது; அன்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவது. 
இத்தகைய நல்ல கோட்பாடுகளை உணர, தமிழர்கள் திருப்புகழையும் மற்ற பக்திப் பாடல்களையும் கற்பது நல்லது.
ஓம் முருகா!
ஓம் நம சிவாய! 


Sunday, January 08, 2023

படித்ததில் பிடித்தது.

தமிழர்கள் ஆதி காலத்தில் பொதுவாக, சிவனை வணங்கி வந்தனர். அதே சமயம், அவரவர் வட்டார வழக்கான பெருந்தெய்வங்களையும் சிறு குல தெய்வங்களையும் வணங்கினர்.  

வெவ்வேறு வழிபாட்டு முறைகள் இருந்தாலும் ஒற்றுமையாக வாழ்ந்தனர். அதன் விளைவாக பலப்பல கோவில்கள் எழுந்தன.  அவற்றைப் பற்றிய குறிப்புகளும் இலக்கியங்களில் இடம்பெற்றன. 

மாற்று மதங்களான வைதீகம், பௌத்தம், சமணம் போன்றவை வந்து தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்றன. அவற்றின் விளைவாக, நிறைய கலப்புகள் தோன்றின. சில மதங்கள் சேர்ந்து ஒரு மதம் போலத் தோன்றியதால் பல குழப்பங்கள் விளைந்தன. 

நல்ல வேளையாக, இப்போது, தமிழர் தம் சமயம் குறித்த தெளிவு அதிகரித்து வருகிறது. படித்தவர்கள் பகிர்ந்துவருகின்றனர். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு, இந்தப் பதிவு: 

 https://tamilandvedas.com/2014/08/05/பிறவா யாக்கைப் பெரியோன்

 சிவாயநம! 

பிறவா யாக்கைப் பெரியோன் கோயில்!

meenakshi close
Madurai Meeakshi Temple is considered as one of the 100 Wonders of the World

சிலப்பதிகாரக் கோவில்கள்

ஆராய்ச்சிக் கட்டுரை: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்: 1215; தேதி 5 ஆகஸ்ட் 2014

சிலப்பதிகாரம் என்னும் தமிழ் காப்பியம், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. 1800 ஆண்டுகளுக்கு முன் ‘’தமிழ் கூறு நல்லுலகம்’’ எப்படி இருந்தது என்பதைப் படம் பிடித்துக் காட்டும் அற்புத நூல் இது. படிக்கப் படிக்கத் தெவிட்டாது. இதில் இல்லாத விஷயங்கள் இல்லை. இது ஒரு இந்துமத கலைக் களஞ்சியம். இதற்கு அடியார்க்கு நல்லாரும் அரும்பத உரை ஆசிரியரும் எழுதிய உரைகளைப் பயிலுவோருக்கு இசை, நடனம், சமயம், கலை, பண்பாடு, ஒழுக்க சீலங்கள், கோவில்கள், இந்திர விழா, நாட்டுப் புறப் பாடல்கள், யாழ், தமிழ் நாட்டுக் கதைகள், நம்பிக்கைகள், வரலாறு, புவியியல், இசைக் கருவிகள் முதலியன பற்றி ஏராளமான விஷயங்கள் கிடைக்கும். தமிழ்நாட்டில் இன்று 38,000 கோவில்கள் உள்ளன. தமிழ் மொழி தெய்வத் தமிழ் என்று போற்றப்படுகிறது. ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கோவில்களும் வழிபாட்டு முறைகளும் மாறிவிட்டன!

சேரன் செங்குட்டுவன் மஹா சிவ பக்தன். தலையில் சிவனின் பாதங்களைச் (காலணிகள்) சுமந்து கொண்டிருக்கையில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி (பெருமாள்) கோவில் பட்டர்கள் ஓடிவந்து பிரசாதம் கொடுத்தனர். உடனே அதைத் தோளில் சுமந்தார். இதைப் பாடிய இளங்கோ, தலையில் சிவனின் பாதங்கள் இருந்ததால் தோளில் பெருமாள் பிரசாதத்தை வைத்தார் என்று சொல்வதில் இருந்து ஹரியையும் சிவனையும் ஒன்று என்று உணர்ந்த பெருந்தகை செங்குட்டுவன் என்பது விளங்கும்.

சிலப்பதிகாரத்தில், தமிழ் நாட்டுக் கோவில்கள் பற்றி ஐந்தாறு இடங்களில் அற்புதமான தகவல்கள் வருகின்றன. அவற்றில் எதுவும் இப்போது இல்லை. ஏனெனில் அந்தக் காலத்தில் செங்கல், சுண்ணாம்பு, மரம் ஆகியவற்றால் அவை எல்லாம் கட்டப்பட்டன. அவை கால வெள்ளத்திலும் கறையான் வாயிலும் விழுந்து அழிந்துவிட்டன. சில வழிபாடுகள் காலப் போக்கில் மறந்தும் மறைந்தும் போயின.
இளங்கோவின் பட்டியலில் எங்குமே பிள்ளையார் வழிபாடோ, கோவில்களோ குறிப்பிடப்படவில்லை என்பது இந்தக் காவியத்தின் காலத்தைக் கணிக்க உதவுகிறது. நாலாம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் யாத்த காவியம் இது.

srirangam kuthirai veera
Srirangam Temple pillars

சில கோவில்களின் பட்டியலை இளங்கோவின் வாய் மொழியாகவே கேட்போம்:

கோவில் பட்டியல் 1 (இந்திரவிழவு ஊர் எடுத்த காதை)
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
……………………………………………………………..
அறவோர் பள்ளியும், அறன் ஓம்படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்

பொருள்: 1)அவதாரம் என்ற பெயரில் ஒரு தாயின் வயிற்றிலும் பிறவாத மஹாதேவனாகிய சிவன் கோவிலும், 2)ஆறுமுகன் கோவிலும், 3)வெள்ளை நிற சங்கு போல உடலை உடைய பலதேவன் கோயிலும் (கிருஷ்ணனின் சகோதரன்), 4)நீலமேனி உடைய பெருமாள் கோயிலும், 5)முத்து மாலையும் , வெண்குடையும் உடைய இந்திரன் கோயிலும், 6)சமணர்களின் பள்ளியும், அறச் சாலைகளும், துறவிகள் வாழும் ஒதுக்குப் புறமான இடமும் பூம்புகாரில் இருந்தன.

temple side view

கோவில் பட்டியல் 2 (கனாத் திறம் உரைத்த காதை)

அமரர்தருக் கோட்டம், வெள்யானைக் கோட்டம்
புகார் வெள்ளை நாகர்-தம் கோட்டம், பகல் வாயில்
உச்சிக்கிழான் கோட்டம், ஊர்க் கோட்டம், வேற் கோட்டம்
வச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக் கோட்டம், புக்கு எங்கும்
தேவிர்காள்! எம் உறு நோய் தீர்ம் என்று மேவி
பாசண்டச் சாத்தற்கு பாடு கிடந்தாளுக்கு

பொருள்: 1)கற்பக மரம் உள்ள கோயில்,
2)ஐராவதம் (இந்திரன் வாகனம் வெள்ளையானை) உள்ள கோயில், 3)பலதேவன் கோயில்,
4)சூரியன் கோயில்,
5)சந்திரன் கோயில்,
6)ஊர்த் தேவதை கோயில்,
7)முருகன் கோயில்,
8)இந்திரனின் வஜ்ராயுதம் உள்ள கோயில்,
9)ஐயனார் கோயில்,
10)அருகன் கோயில்,
11)பாசண்டச் சாத்தன் கோயில்.

lepakshi multihead
Lepakshi Temple sculpture

கோவில் பட்டியல் 3 (நாடுகாண் காதை)

அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து
பணை ஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் நீழல் அறவோன் திர்ருமொழி
அந்தரசாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர விகாரம் ஏழ் உடன் போகி—
………………………….
ஐவகை நின்ற அருக தானத்து

பொருள்: 1)ஐந்து கிளை போதி மரத்தின் கீழ் உள்ள புத்ததேவனின் இந்திரவிகாரங்கள் ஏழு, 2)பஞ்ச பரமேஷ்டிகள் நிற்கும் அருகன் இடம்.

கோவில் பட்டியல் 4 (காடுகாண் காதை)

காடுகாண் காதையில் திருவரங்கம், திருப்பதி கோயில்கள் வருகின்றன.

1)ஸ்ரீரங்கத்தில்
திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும்

2)திருப்பதியில்
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
காணப் புறப்பட்டதாக மாங்காட்டு மறையோன் என்னும் பிராமணன் வாயிலாக இளங்கோ பாடுகிறார்.

3)ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு – என்
கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் என்ற சமண மதப் பெண் துறவி மூவரும் ஒரு துர்க்கை கோவிலில் ஓய்வு எடுத்தனர்.

தங்க கோபுரம்
Gold Towers are in Madurai, Tirupati, Srirangam, Chidambaram and several other temples

கோவில் பட்டியல் 5 ( ஊர் காண் காதை)
மதுரை நகரில் உள்ள கோவில்கள்

நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்
உவணச் சேவல் உயர்த்தோன் நியமும்
மேழி வலன் உயர்த்த வெள்லை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்
மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்

பொருள்: 1)நெற்றிக் கண்ணன் (சிவன்) கோயில், 2)கருடக் கொடி வைத்திருப்பவன் (விஷ்ணு) கோயில், 3)கலப்பை வைத்திருப்பவன் (பலராமன்) கோயில், 4)கோழிக் கொடி வைத்திருப்பவன் (முருகன்) கோயில், 5)சமணர் பள்ளிகள், ராஜாவின் அரண்மனை (மன்னவன் கோயில்).

2alakarkoil
Alagarkoil near Madurai
Tamilnadu_02
Jain centres of Tamil Nadu

கோவில் பட்டியல் 6 ( குன்றக் குரவை)
முருகன் கோவில்கள்
சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே—
பாரிரும் பௌவத்தினுள் புக்குப், பண்டொருநாள்,
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள்வேலே

பொருள்: 1)திருச்செந்தூர், 2)திருச்செங்கோடு, 3)சுவாமிமலை, 4)திருவேரகம் ஆகிய தலங்களை முருகன் ஒருபோதும் விட்டுப் பிரிவது இல்லை.முன்னொரு காலத்தில் கடல் நடுவில் மாமர வடிவில் நின்ற சூரனை வென்ற சுடர்மிகு வேல் அவன் கையில் உள்ளது!

கோவில் பட்டியல் 7 ( கால்கோட் காதை)
ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் கொண்டு சிலர் நின்று ஏத்த
ஆடக மாடம்= திருவந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில்
நீர்ப்படைக் காதையிலும் வேறு சில இடங்களிலும் புத்த விஹாரங்கள் பாடப்படுகின்றன.

வாழ்க ‘தருமமிகு’ தமிழ் நாடு! வளர்க தெய்வத் தமிழ்!!

–சுபம்–

  1 5 .1.2026 தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு - ஒரு சிந்தனை! (எழுத்து: முனைவர் ச மீனாட்சி,   தலைவர், சிங்கப்பூர் சைவ சித்தாந்த சங்கம்) ...